வியாழன், 28 நவம்பர், 2024

பறவைகளின்காதல்

 பறவைகளின் காதல் வாழ்க்கை!

மனிதர்கள்தாம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு(!) வாழ்பவர்கள் என்று எண்ண வேண்டாம்.
சே…சே…நாங்கள் அப்படியெல்லாம் எண்ணவில்லையாக்கும்! மனைவி இணைவி துணைவி சகிதம் வாழும் 'மனிதருள் மாணிக்கங்கள்' எம்மில் பலருண்டு என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கவே செய்கிறது; 😉அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம்!
பறவைகளிலும் இணைபிரியாமல் வாழ்பவை உண்டு. அவ்வாறு வாழும் பறவைகளுள் முதன்மையாகக் குறிப்பிடப்படுவது 'மகன்றில்' எனும் நீர்ப்பறவை. இவற்றில் காதல் இணையராக வாழும் ஆண், பெண் பறவைகள் சிறிதுநேரப் பிரிவைக்கூடத் தாங்காதவை என்கிறது குறுந்தொகைப் பாடல்.
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய வுலகத்து
ஒருவே மாகிய புன்மை நாம் உயற்கே. (குறுந்: 57 – சிறைக்குடி ஆந்தையார்)
”நீரில் நீந்திச் செல்லும்போது. இடையில் குறுக்கிடும் பூவானது தம்மைச் சில நொடிகள் பிரித்தால்கூட அதனை ஆண்டுக் கணக்கில் பிரிந்திருப்பதாக எண்ணி வருந்தும் மகன்றில் பறவைகளின் சேர்க்கைபோல, ஈருடல் ஓருயிராக வாழ்கின்றவர்கள் நானும் தலைவனும். இல்லறக் கடமைகளை ஆற்றுவதற்காக வெளியே சென்றிருக்கும் தலைவனைப் பிரிந்து காதல்நோயில் வாடுவதைவிட என்னுயிர் உடனே போய்விடுவது நல்லது” 😞என்று இப்பாடலில் வருந்தியுரைக்கிறாள் தலைவி.
மகன்றில் போலவே அன்றில் பறவைகளும் இணைபிரியாமல் வாழ்பவையே. சிலர் அன்றிலும் மகன்றிலும் ஒன்று என்றெண்ணிக் கொள்வர். அவை வேறுவேறானவை. மகன்றில் பறவைகள் நீர்வாழ்வன; மருத நிலத்தவை. ஆனால், அன்றில்கள் நெய்தல்நிலத்தைச் சார்ந்தவை. பெரும்பாலும் இவை பனை மரங்களில் உறைவதாக இலக்கியங்கள் காட்டுகின்றன.
ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்… (நற்: 124 – மோசி கண்ணத்தனார்)
ஒன்று பிரிந்தவேளையில் மற்றோர் அன்றில் பறவை வாழாமல் உயிர்நீத்து விடுதல்போல், நின்னைப் பிரிந்து தனித்து வாழும் வாழ்க்கையை யான் ஆற்றாமல் இறந்துபடுவேன்” என்று தலைவனிடம், தலைவியின் சார்பாக, உரைக்கின்றாள் தோழி இப்பாடலில்.
ஒன்று அன்றி மற்றொன்று இல்(லை) என்பதால்தான் இப்பறவைகள் அன்றில் எனும் பெயர்பெற்றன போலும்! 😇
இவ்வரிசையில் புறாவையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.
இணையை மாற்றாமல் ஒரே இணையோடு இறுதிவரை வாழும் தன்மையுடையவை புறாக்கள். இன்னொரு பெண் புறா மத்தாப்புப் போல் தன் பளீர் அழகைக் காட்டி மயக்கப் பார்த்தாலும் உத்தமக் குடும்பத் தலைவனான ஆண் புறா அதுகண்டு மயங்காதாம்; தன் துணைப் புறா இறந்து தபுதார நிலை வாய்த்தால் மட்டுமே (when it becomes a widower) இன்னொரு பெண் புறாவை அது நாடுமாம். இதை நான் சொல்லவில்லை! பாவேந்தர் பாரதிதாசன் தம்முடைய 'அழகின் சிரிப்பு' எனும் நூலில் அழகாய்ப் பதிவுசெய்துள்ளார்.
ஒருபெட்டை தன்ஆண் அன்றி
வேறொன்றுக் குடன் படாதாம்
ஒருபெட்டை மத்தாப்பைப் போல்
ஒளி புரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல் தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்! (அழகின் சிரிப்பு)
இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? உயர்ந்த காதலை நாம் பறவைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் என்பதுதானே!🙂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பறவைகளின்காதல்

  பறவைகளின் காதல் வாழ்க்கை! மனிதர்கள்தாம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு(!) வாழ்பவர்கள் என்று எண்ண வேண்டாம். சே…சே…நாங்கள் அப்படியெல்லாம...